விடாது கருப்பு.. சசிகலா உள்ளிட்டோர் மீது டிஜிபியிடம் மீண்டும் நில அபகரிப்பு புகார்!
தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக சசிகலா உள்ளிட்டோர் மீது டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றினார் சசிகலா. தற்போது முதல்வராகவும் வர வேண்டும் என கபளீகரம் செய்து வருகிறார். ஆனால் சசிகலா முதலமைச்சர் ஆவதை பலரும் விரும்பவில்லை. அதிமுகவில் கூட சசிகலாவுக்கு முழுமையான ஆதரவு இல்லை. கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் தமிழக டிஜிபியிடம் சசிகலா மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், சசிகலாவும், அவரது உறவினர்களும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய இடங்களில் 112 ஏக்கர் நிலத்தை சசிகலாவும், அவரது உறவினர்களும் ஆக்ரமித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற துடித்து வரும் சசிகலாவுக்கு வழக்குகளும், புகார்களும் அடுத்தடுத்து வரிசை கட்டுவது சிக்கலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.