பச்சமுத்துவை தொடர்ந்து மகன் ரவி பச்சமுத்துவும் கைதாகிறார்... நில அபகரிப்பு மோசடி புகார்!
சென்னை: எஸ்ஆர்எம் கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அவரது மகன் ரவி மீது அளிக்கப்பட்டுள்ள நில மோசடி புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் முறையீடு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் ரூ.72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். பின்னர் இரவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் முடிவில் செப்டம்பர் 9ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இரவு பச்சமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே எஸ்.ஆர்.எம். பேருந்து நிறுத்தம் உள்ளது. அதன் பின்புறம் இருந்த எட்டு கிரவுண்ட் நிலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி கூலிப்படை உதவியுடன் போலிப் பட்டா தயாரித்து ரவி பச்சமுத்து அபகரித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட டெய்சி, மாதவராவ், சீனிவாச ராவ், ராஜா, மகேஷ் ராஜா, கணேஷ் ராஜா ஆகியோர் ரவி பச்சமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரவி பச்சமுத்து மற்றும் அவர் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் கோயம்பேடு காவல் ஆய்வாளர், ரவி பச்சமுத்துவின் பெயரை சேர்க்காமல், அலுவலக ஊழியர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர், ரவி பச்சமுத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரையும் போலீசார் முறையாக விசாரித்தால் ரவி பச்சமுத்துவும் கைது செய்யப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.