திருவள்ளூர் தொகுதி வி.சி.வேட்பாளர் ரவிக்குமாருக்கு எதிராக புகார்
சென்னை: திருவள்ளூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 2006 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
2006 ம் ஆண்டில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு ரூ.9.01 லட்சம் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், 2011 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.57.92 லட்சம் என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் அவர் ரூ.48.91 லட்சங்கள் வரை வருமானம் ஈட்டியுள்ளார். இந்த வருமானத்திற்காக ஆதாரங்களை குறிப்பிடவில்லை.
எனவே, சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.