ஈரோடு: பஞ்சமி நிலங்களின் எண்ணிக்கையை குறைப்பதா? ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவருக்கு கண்டனம்
ஆதிதிராவிடர் தேசிய ஆணைய துணை தலைவருக்கு தமிழ்நாடு புரட்சி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: பஞ்சமி நிலங்களை குறைத்து தவறான தகவல்களை தருவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் முருகன் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஆணையரின் இந்த பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளநிலையில் ஆணைய துணை தலைவர் இதனை மறைத்து 2 லட்சம் ஏக்கர் என்று தெரிவித்திருப்பதில் உள்நோக்கம் உள்ளதாக தமிழ்நாடு புரட்சி கழகம் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சங்கராபாளையத்தில் பஞ்சமி அல்லாதவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள 7 ஏக்கர் நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரோடு எஸ்பி சக்திகணேசனிடம் பாதிக்கப்பட்ட மக்களுடன் வந்து மனு கொடுத்துள்ள அந்த அமைப்பினர், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.