கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.. நித்தியானந்தா, எச் ராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நித்தியானந்தா மற்றும் எச் ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நித்தியானந்தா மற்றும் எச் ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
பாஜகவின் தேசிய செயலாளரான எச் ராஜாவும் வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அவர் மீது போலீஸிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
சிஷ்யைகளின் ஆபாச பேச்சு
இந்நிலையில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் எனக் கூறி அவரது ஆசிரமத்தை சேர்ந்த சிறுமிகள் கவிஞர் வைரமுத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர். மிகவும் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளையும் பேசி அந்த சிறுமிகள் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.
ஏற்கனவே புகார்
இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. நித்தியானந்தா ஆசிரமம் குறித்து கர்நாடக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நித்தியானந்தா மற்றும் எச் ராஜா குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்
இது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. எச் ராஜாவின் செயல்பாடு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்க வேண்டும்
எனவே எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச் ராஜாவின் செயல்பாடு மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாசத்தை போதிக்கும் நித்தி
மேலும் ஆண்டாள் விவகாரத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் சமூகவலைதளத்தில் ஆபாசமாக அரசியல் கட்சி தலைவர்களை விமர்சித்து வருகின்றனர். ஆன்மீகம் என்ற பெயரில் ஆபாசத்தை போதிக்கும் நித்தியானந்தா மற்றும் அவரின் சீடர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.