ஜெ., காலடியில் சொர்க்கம் இருக்கிறது.. இஸ்லாமை இழிவுபடுத்தியதாக பாத்திமா பாபு மீது வழக்கு
சென்னை: ஈரோட்டில், கடந்த 19ம் தேதி இரவு, அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாத்திமாபாபு, இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அதிமுக ஸ்டார் பிரச்சார பிரமுகரான பாத்திமா பாபு மீது தேர்தல் அலுவலரிடம் அக்கட்சி கொடுத்துள்ள புகார்:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில், அதிமுக, சார்பில், பாத்திமாபாபு பிரசாரம் செய்தார். அப்போது, இஸ்லாமியர், தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முகமது நபிகள், ஒவ்வொருவரின் தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
அப்படி பார்க்கையில், ஜெயலலிதா அம்மாவின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது. எனவே, முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று அவர் பேசினார்.
தேர்தலுக்காக பிரசாரம் செய்ய வருபவர்கள், அவர்கள் செய்த சாதனைகளையும், எதிர்கால திட்டத்தை பற்றி பேசி, ஓட்டு சேகரித்துக்கொள்ளட்டும். இறைவனையும், இறைதுாதர்கள் பற்றியும் பேசி, எந்த மதத்தவரின் மனதையும் புண்படுத்தக் கூடாது. எனவே, பாத்திமாபாபு பிரசாரத்துக்கு தடை விதித்து, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்றால், பாத்திமாபாபு பிரசாரம் செய்யும் பகுதிகளில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்யப் படும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.