'மேட்' பேரவை விண்ணப்பம் விற்று மோசடி... தீபா மீது போலீசில் புகார்
தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை: தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் விற்றதில் மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கம் ஜானகிராம் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலிப்பதாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய பேரவையை தொடங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை என்று பெயர் வைத்து கொடியை அறிமுகம் செய்தார்.
விண்ணப்பம் விற்று வசூல்
தீபாவின் டிரைவர் ராஜாவின் ஆலோசனைப்படிதான் ‘எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை' ஆரம்பிக்கப்பட்டது. 3 லட்சம் அப்ளிகேஷன் ஃபார்முக்கு தலா 10 ரூபாய், ஒரு விண்ணப்பத்திற்கு 25 உறுப்பினர்கள் வீதம் 250 ரூபாய்னு கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேல வசூலானதாக தெரிகிறது.
கோடி கோடியாய் பணம்
ஒன்றிய செயலாளர் பதவிக்கு 5 லட்சம் , மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 லட்சம் என்று வசூலித்தனர். இது தவிர பல வழிகளிலும் கோடிக்கணக்கில் பணம் வசூலானதாம். கோடி கோடியாக பணம் கொட்டவே தீபா, கணவன் மாதவன், தீபாவின் டிரைவர் ராஜா இடையே சிக்கல் உருவானது. இதில் ஒரு பெட்டியில் பணத்தை எடுத்துக்கொண்டு மாதவன் வெளியேறியதாக புகார் எழுந்தது.
மாதவன் அக்கப்போர்
இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து வெளியேறுவதாக கூறி தனிக்கட்சி தொடங்குவதாக கூறினார் மாதவன். எம்ஜிஆர். அம்மா தீபா பேரவையின் அங்கீகாரமே ரத்தாகிவிட்டது. இதைப்பற்றி யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் நிர்வாகிகள் தினசரியும் சென்னை வந்து தீபா வீட்டு வாசலில் மாதவன் ஆதரவாளர்களுடன் சண்டை போட்டுக்கொள்கின்றனர்.
தீபா மீது புகார்
இந்த சூழ்நிலையில்தான் தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் விற்றதில் மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கம் ஜானகிராம் குற்றம் சாட்டியுள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலிப்பதாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தீபாவை நம்பி கோடி கோடியாய் பணத்தைக் கொண்டியவர்கள் இப்போது முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.