கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும்.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
சென்னை: நிலவேம்பு கசாயம் குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெங்கு கட்டுப்பாடுக்காக வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தால் பக்க விளைவு ஏற்படுவதாக ஒரு புரளி சுற்றி வரும் நிலையில், டிவிட்டரில் நேற்று கருத்து தெரிவித்த கமல்ஹாசன், அந்த தகவல் குறித்த ஆய்வு முடிவுகள் வரும்வரை தனது நற்பணி மன்றத்தார், நிலவேம்பு கசாயத்தை வழங்க கூடாது என தெரிவித்திருந்தார்.
வித்தியாசமாக எதையாவது பேசினால் கவன ஈர்ப்பு கிடைக்கும் என்பதால் இப்படி அவர் பேசியிருக்க கூடும் என பாஜக எம்.பி. இல.கணேசன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்ற சமூக சேவகர் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தமிழக அரசு மீதான தனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்காக கமல் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி வருவதாகவும், நிலவேம்பு கசாயம் குறித்து பொய் தகவலை பரப்பியுள்ளார் என்றும், அவரின் டிவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்றும், வன்முறையை தூண்டியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.