தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல்! - கமிஷனரிடம் புகார்
சென்னை: தமிழகத்தில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல் ஹாஸன் என்று கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், "நடிகர் கமல் ஹாஸன் எழுதி வரும் ஒரு கட்டுரைத் தொடரில் இந்து மதத்துக்குள் தீவிரவாதம் இல்லை என யாரும் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார்.
எந்த மதமும் தீவிரவாதம், வன்முறையை போதிக்கவில்லை. அன்பைத்தான் வலியுறுத்துகின்றன. இந்துக்களை தீவிரவாதி எனக் கூறி தமிழகத்தில் பிரிவினையையும் வன்முறையையும் தூண்டும் வகையில் எழுதியும் பேசியும் வருகிறார் கமல் ஹாஸன். இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.
எனவே அவரை தேச விரோத சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தனது பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகார் மனுவை பெற்றுக் கொண்டார் சென்னை போலீஸ் கமிஷனர்.