அந்த வாக்கெடுப்பை 'நமது எம்ஜிஆர்’ நடத்தவில்லையாம்.. ஹேக் செய்துவிட்டதாக கமிஷனரிடம் புகார்!
சென்னை: 'நமது எம்ஜிஆர்' பத்திரிகையின் இணையதளத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக நாளிதழ் பெயர் ‘நமது எம்ஜிஆர்'. இதன் இணையதள பக்கத்தில் 3 நாட்களுக்கு முன்பு, ‘2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்' என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டிருந்தது. அதில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக 13 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்திருந்தனர். திமுக கூட்டணிக்கு 85 சதவீதம் பேர் வாக்களித்திருப்பதை போல காண்பித்தது.
திமுகவுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு பெருகிவிட்டதை இந்த கருத்துக்கணிப்பு உணர்த்திவிட்டதாக கூறி, இத்தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டது. அதேநேரம், திமுக என்ற ஒரு ஆப்ஷனை, நமது எம்ஜிஆர் பத்திரிகை வைத்திருக்க வாய்ப்பேயில்லை என்றும் இது ஏதோ விஷமச்செயல் என்று கூறியவர்களும் கணிசமானோர் இருந்தனர்.
இந்நிலையில், நமது எம்ஜிஆர் பத்திரிகையை விஷமிகள் ஹேக் செய்து, இவ்வாறு ஒரு பரபரப்பை கிளப்பியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பத்திரிகை, ஆசிரியர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், ‘நமது எம்ஜிஆர் இணையதளத்தை யாரோ முடக்கி, அதில் அவர்களுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளனர். எங்கள் இணையதளத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.