செருப்பில் "ஓம்" மந்திரம், பீர் பாட்டிலில் "பிள்ளையார்": தொடரும் யுஎஸ் ஆன்லைன் நிறுவனங்களின் அடாவடி
காலணியில் ஓம் மந்திரம் மற்றும் பீர் பாட்டிலில் பிள்ளையார் படத்தையும் வெளியிட்டு விற்பனை செய்த அமெரிக்க ஆன்லைன் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த 2 ஆன்லைன் நிறுவனங்கள் ஷுவில் ஓம் மந்திரத்தையும் பீர் பாட்டிலில் பிள்ளையார் படத்தையும் வெளியிட்டு விற்பனை செய்துள்ளன. அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்களின் உணவுகளை காயப்படுத்துவதை அமெரிக்க ஆன்லைன் நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. அண்மையில் அமெரிக்க நிறுவனமான அமேசான் தனது ஆன்லைன் விற்பனை பக்கத்தில் செருப்பில் மகாத்மா காந்தியடிகளின் படத்தையும் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மிதியடியையும் வெளியிட்டது.
இது இந்தியர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் இந்தியாவில் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவரைஜ் எச்சரித்தார். இதையடுத்து வருத்தம் தெரிவித்த அமேசான் நிறுவனம் தனது பொருட்களையும் ஆன்லைனில் இருந்து நீக்கியது.
ஷுக்களில் ஓம் மந்திரம்
இந்தப் பஞ்சாயத்தே முடியாத நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தற்போது ஏழரையை கூட்டியுள்ளன. யெஸ்விவைப் என்ற நிறுவனம் ஷுக்களில் ஓம் என்ற மந்திரத்தை அச்சிட்டுள்ளது.
பீர் பாட்டிலில் பிள்ளையார் படம்
லாஸ்ட்காஸ்ட் என்ற நிறுவனம் பீர் பாட்டிலில் இந்துக் கடவுளான பிள்ளையார் படத்தை போட்டு விற்பனை செய்கிறது. இந்து மதத்தினரை அவமதிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
போலீஸில் புகார்
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சாரணர் இயக்க கமிஷனருமான நரேஷ் கதியான் என்பவர் விஹார் பகுதி காவல்நிலையத்தில் அந்த அமெரிக்க நிறுவனங்கள் மீது புகார் அளித்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை - உறுதி
இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது வேண்டுமென்றே தீய செயல்களுக்கு தூண்டுவது, மத நம்பிக்கைகளை அவமதிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.