நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம் - மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
திருச்சி: பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த சங்கீதாவின் தந்தை, ‘தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக' திருச்சி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி ஆசிரம வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார் சங்கீதா. உடனடியாக சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர் ஆசிரமத்தினர்.
திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட சங்கீதாவின் உடல் நாவலூரில் அடக்கம் செய்யப்பட்டது. சங்கீதாவின் மரணம் தொடர்பாக யாரிடமும் குறிப்பாக ஊடகங்களில் வாய் திறக்கக் கூடாது என அவரது குடும்பத்தாரிடம் ஆசிரமத்தார் சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் சங்கீதாவின் தந்தை புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகள் சங்கீதாவின் மரணத்தில் மர்மம் இருபபதாகவும், அதனை கண்டுபிடிக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார்.
முதலில், அந்தப் புகாரை ஏற்க மறுத்த போலீசார், பின்னர் அந்த புகார் குறித்து விசாரிக்குமாறு கர்நாடகா மாநிலம், பிடரி காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.