கம்ப்யூட்டரிலிருந்து தகவல் திருடுவோருக்கு இனி 'குண்டாஸ்'... சட்ட மசோதா தாக்கல்
சென்னை: கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் திருடுவோர், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், அரசின் இணையதளங்களை ஹேக் செய்வோர் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வகை செய்யும் சட்ட மசோதாவை மாநில சட்டத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்து அவர் பேசுகையில்,
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொது ஒழுங்கை பராமரிக்க குந்தகம் விளைவிக்குறது. கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபசார தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நிலங்களை அபகரிப்பவர்கள், காணொலி திருடர்கள் ஆகியோரின் அபயாகரமான செயல்களை தடை செய்தல் சட்டத்தின்படி பாலியல் குற்றவாளிகளையும் தடுப்பு காவல் வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக 13 அம்ச திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பாலியல் குற்றவாளிகளையும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு ஏற்பட சட்ட திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது கணினி குற்றம் (சைபர் கிரைம்) முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் பரவுவதன் அடிப்படையில் கணினி வெளிச்சட்ட குற்றம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சத்தை அளிக்கும் வகையில் பலம் மிக்கதாக உள்ளது.
மற்றொரு கணினியில் இருந்து தகவலை எடுப்பவர்கள், கணினி குற்றவாளிகளால் வணிகங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் பாதிக்க தக்க வகையிலும் ஸ்தம்பிக்கும் வகையிலும் உள்ளது. எனவே இவர்களையும் குண்டர் சட்டத்தில் (தடுப்பு காவலில்) தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.