ஜெ. மன்னிப்பு கேட்கக் கோரி காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி 'அவதூறு' நோட்டீஸ்
தூத்துக்குடி: தம்மை பற்றி அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி அவதூறு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 2வது மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமார், நடிகை குஷ்பு, விலவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தமிழகம், புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நக்மா, அதிருப்தியின் காரணமாக சென்னையில் இருந்தபோதும் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையே இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, கடந்த 9-ம் தேதி அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் 'சாட்டை' என்ற பெயரில் என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
என் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.
எதிர்க்கட்சிகள் மீது தமிழக அரசும் முதல்வர் ஜெயலலிதாவும் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயலலிதாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.