தஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி
தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தஞ்சை: தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக சார்பில் போட்டியிட்ட ரங்கசாமி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்ததையடுத்து, தஞ்சைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் ரங்கசாமியும் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியில் கடந்த 19ந் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. 19 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 99,362 வாக்குகள் பெற்று 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் ரங்கசாமி பேசியதாவது:
என்னை வெற்றி பெற வைத்த தஞ்சைத் தொகுதி மக்களுக்கு நன்றிகள். முதல்வர் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவர் செய்த சாதனைக்கே இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள உடனடி பிரச்சனையாக உள்ள குடிநீர் பிரச்சனையை முதல்வரிடம் சொல்லி தீர்த்து வைப்பேன். மேலும், அடிப்படை வசதிகள், பூச்சந்தைப் பணிகளை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.