தமிழகத்தில் விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
செங்கல்பட்டு : தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி , திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொரு ஊராக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலில் வென்று, திமுக என்ன திட்டங்களை கொண்டு வந்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பின்பற்றிய அதே பாணியை ஸ்டாலின் தற்போதும் பின்பற்றுவதாக குற்றம்சாட்டினார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நடத்திவரும் கூட்டங்களில், பெண்களை சொல்லிக்கொடுத்து அழைத்துவந்து அதிமுக அரசின் மீது பழி சுமத்தி பேசி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் பேசுகையில், நீண்ட கால திட்டமாக விவசாயிகளுக்கான கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.