தூத்துக்குடி படுகொலை: தாழையூத்தில் செல்போன் டவரில் ஏறி போராட்டம்!
Recommended Video
நெல்லை: தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தாழையூத்தில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய தனிநபர் ஒருவர், தமிழக முதலமைச்சருக்கு எதிராக எழுப்பி வரும் முழக்கங்களினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒருபுறம் அரசியல் கட்சிகளும் மற்றொருபுறம் பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்
அதன்படி, நியாயம் கேட்டு அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அப்பகுதி மக்கள் நேற்றுமுதல் ஒன்றுகூடி போராட முடிவு செய்தனர். அதன்படி அரசுப்பேருந்தினையும் நேற்று சிறைபிடித்தனர்.
அதேபோல, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருநெல்வேலி நகரில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்றிரவு போராட்டமும் நடைபெற்றது.
இன்றும் இதே பிரச்சனைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கைகோர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தாழையூத்தில் ஒருவர், துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி, அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும் என ஆவேச முழக்கமிட்டு வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.