கோவையை விட்டு வெளியேறக் கூடாது.. பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு கண்டிஷன் பெயில்!
லஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: லஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பதவி இடத்திற்கு சுரேஷ் என்பவர் துணைவேந்தர் கணபதியை சந்தித்தார். அப்போது துணைவேந்தர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.29 லஞ்சம் காசோலையை சுரேஷிடம் கொடுத்து அனுப்பினர்.
கணபதிக்கு லஞ்சம்
சுரேஷ் கடந்த 3ஆம் தேதி காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தரின் இல்லத்திற்கு சென்றார். அங்கு துணைவேந்தர் கணபதியை சந்தித்து ரூ.1 லட்சம் பணமும், ரூ.29 லட்சத்துக்கு காசோலையும் கொடுத்ததாக தெரிகிறது.
கைதான கணபதி
அப்போது அங்கு மறைந்திருந்த கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.க்கள் தட்சிணாமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கணபதிக்கு ஜாமீன்
கடந்த ஒரு மாதமாக சிறையில் இருந்த கணபதி பலமுறை ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கணபதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை விட்டு
மேலும் பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், கோவையை விட்டு வெளியேறக் கூடாது, மறு உத்தரவு வரும் வரை லஞ்ச ஒழிப்பு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.