காயலான் கடைக்கு போகும் நிலையில் அரசு பஸ்கள்.. ரிஸ்க் எடுத்து ஓட்டும் டிரைவர்கள்.. பீதியில் பயணிகள்
நெல்லை: நெல்லை அருகே காயலான் கடைக்கு போட வேண்டிய நிலையில் உள்ள அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்து பயணம் செய்து வருகின்றனர்.
நெல்லை அருகே வள்ளியூர் பணிமனையில் இருந்து நாகர்கோவில், நெல்லை மற்றும் வள்ளியூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளதால் மழையின் போது தண்ணீர் வாகனத்திற்குள் விழுகிறது. இதனால் பணிகள் பேருந்திற்குள் குடை பிடித்தவாறு பயணிக்க வேண்டி உள்ளது.
பெரும்பாலான பேருந்துகளில் ஜன்னல் கண்ணாடிகள் இல்லை. சில பேருந்துகளில் மட்டும் தகரங்களை கொண்டு அடைந்துள்ளனர். மேலும் பல பேருந்துகளில்இருக்கைகள் இல்லை. வெறும் கம்பிகள் மட்டுமே உள்ளது. இதில் உட்கார்ந்தால் உருப்படியாக வீடு போய் சேர முடியாது என்பதால் பயணிகள் திகிலில் நின்றபடியே பயணம் செய்து வருகின்றனர்.
இந்த காரணங்களினால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த பேருந்துகளை தவிர்த்து தனியார் வேன், லாரிகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
இது குறித்து வள்ளியூர் பேருந்து நிலையத்தை சேர்ந்த சிலர் கூறுகையில்,
சமீபகாலமாக இந்த ஓட்டை உடைசல் பேருந்துகளை டிரைவர்கள் இயக்கி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற பேருந்துகளை பற்றி சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு பராமரிப்பு படுமோசமாக உள்ளது. அரசு இதில் தலையிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றனர்.