சிலை கடத்தல் வழக்கில் கைதான இயக்குநர் வி.சேகருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் வி.சேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம், மேற்கு மாம்பலத்தில் வைத்து 80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். சிலைகளை கடத்திய பெரம்பலூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் தனலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், சிலை கடத்தலில் இயக்குநர் வி.சேகருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இயக்குநர் சேகர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இயக்குநர் வி.சேகரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும், ரூபாய் 20 இலட்சம் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் சத்யா உத்தரவு பிறப்பித்தார்.
இதே வழக்கில் கைதான பெண் நிருபர் மாலதியும் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் சிலை கடத்தல் கும்பல் தலைவனும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியுமான ஜெயக்குமாரை கைது செய்வோம் என சிலை திருட்டு தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.