எம்.எல்.ஏ சீனிவேல் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் - ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் இன்ற சபாநாயகர் தனபால் தலைமை தொடங்கியது. எம்.எல்.ஏ. சீனிவேல் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் 5 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த எம்.எல்.ஏ. சீனிவேல் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் 20ம் தேதிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சீனிவேல். தேர்தலில் 93,453 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மணிமாறனை 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். உடல்நலக் குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த சீனிவேல் கடந்த மே 25ம் தேதி காலையில் மரணமடைந்தார்.
அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கட்சியில் உள்ள சீனிவேல், 2001ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உடல்நலக் குறைவால் கடந்த 10 ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதய நோயாளியான அவர் கடந்த ஒரு மாதமாக தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு, இதய நோயுடன் பக்கவாதம் ஏற்பட்டதால் சொக்கி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றது தெரியாமலேயே மரணமடைந்து விட்டார் சீனிவேல். தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையாமலேயே மரணமடைந்த எம்.எல்.ஏ சீனிவேலுக்கு இன்று சட்டசபையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார் பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மணி, ராஜாராம் நாயுடு, செல்வராஜ், நாச்சிமுத்து, பழனிச்சாமி ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் சட்டப்பேரவை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 20ம் தேதி முதல் 23ம் தேதி நடக்கும் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.