கொடுமுடியில் வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினர் ரகளை.. தேர்தல் ரத்து
கொடுமுடி கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து: வாக்குச்சீட்டுகளை கிழித்தெறிந்து அதிமுகவினர் ரகளை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுகவினர் இரு தரப்பு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் என 29 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் வாக்கு பதிவு செய்வதற்காக சங்க உறுப்பினர்கள் காத்திருந்த நிலையில் அங்கு வந்த அதிமுக வின் ஒரு தரப்பினர், வாக்குசாவடியில் கேமராவில் காட்சிகள் பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென வாக்கு பதிவு மையத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த வாக்கு சீட்டுகளை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் வாக்கு பெட்டியையும் உடைத்தனர். இதனால் சங்க உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்யாமல் வெளியேறினர். இதனையடுத்து தேர்தலை ரத்து செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர்.