தொடரும் அதிமுக நேர்காணல்... ’திரும்பத் திரும்ப’ ஒரே மாதிரி பதில் சொல்லும் வேட்பாளர்கள்!
சென்னை: நேர்காணல் ஒரே நாளில் முடிந்துவிட்டது என முதலில் ஷாக் தந்த அதிமுக, தற்போது பொறுமையாக நாள்கணக்கில் நேர்காணல் நடத்தி வருவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி முக்கிய கட்சிகள் ஏற்கனவே நேர்காணலை நடத்தி வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து விட்டன. இந்நிலையில், தற்போது அதிமுக நேர்காணல் நடந்து வருகிறது.
முன்னதாக திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது, அதிமுக அதிரடியாக ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்துவிட்டதாக அறிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஒரே நாளில்...
இது தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய அறிக்கையும் கட்சி அலுவலகத்தில் இருந்து இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், விருப்பமனுத் தாக்கல் செய்த சில வேட்பாளர்களிடம் ஜெயலலிதா நேர்காணல் செய்வது போன்ற புகைப்படம் இருந்தது.
மீண்டும் நேர்காணல்...
இதனால் நேர்காணல் முடிந்து விட்டது. விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதிரடியாக மீண்டும் இம்மாதம் 21ம் தேதி முதல் நேர்காணல் தொடங்கியது.
போயஸ் கார்டன்...
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வைத்து நடைபெறும் இந்த நேர்காணலில் மாவட்ட வாரியாக விருப்பமனுத் தாக்கல் செய்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மூன்று பேர் என்ற கணக்கில் அழைக்கப்பட்டு நேர்காணல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
குழப்பம்...
இவ்வாறு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கட்சி மேலிடத்தால் சமீபத்தில் ஓரம்கட்டப்பட்ட அமைச்சர்களின் ஆதரவாளர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சியின் மற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
2 வகை பட்டியல்...
ஐவர் அணியினர் ஓரம் கட்டப்படுவதற்கு முன் அவர்கள் இரண்டு வகையான பட்டியலைத் தயார் செய்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தொகுதிக்கு மூன்று பேரை பரிந்துரை செய்ய வேண்டும் என்பதால், தங்களது ஆதரவாளர்களாகத் தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதியிலும் முதலிடத்தில் அவர்கள் பெயரை இடம் பெயரச் செய்திருப்பதாகத் தெரிகிறது.
பிளான் ஏ...
அதோடு தங்களது ஆதரவாளர்கள் கட்டாயம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக அடுத்த இரண்டு இடங்களில் டம்மியாக எந்தத் தகுதியும் இல்லாதவர்களாக அவர்கள் பரிந்துரைத்துள்ளனராம். இதன்மூலம், தாங்கள் விரும்பும் நபருக்கே, 'சீட்' கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் ஏற்பாடு எனப்படுகிறது.
பிளான் பி...
இதேபோல், இரண்டாவது பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலுடன், மற்ற தகுதியில்லாத வேட்பாளர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாம். இதன்மூலம் மீண்டும் தற்போதைய எம்.எல்.ஏ.வுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பது திட்டமாம்.
புரியாத புதிர்...
இதற்கிடையே போயஸ் கார்டனில் நடைபெற்று வரும் நேர்காணலில் பங்கேற்கும் அனைவருமே முதல்வரை நேரில் சந்திக்கின்றனரா என்பதும் புதிராகவே இருக்கிறது. காரணம் நேர்காணலில் பங்கேற்ற அனைவருமே, ‘அவர்களின் குடும்ப விவரங்களை ஜெயலலிதா கேட்டதாகவும், தேர்தலில் போட்டியிட வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்' எனக் கூறியதாகவும், ஒரே கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
மொத்தமாக...
எனவே, ஜெயலலிதா, ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்க்கவில்லை. கட்சி நிர்வாகிகளை பார்த்த பிறகு, அனைவரையும் ஒன்றாக பார்க்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படியாக பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நடந்து வருகிறது அதிமுக நேர்காணல்.