இறந்த ஆட்டோ ஓட்டுநர் உடலில் தெரிந்த அசைவு.... தேனி அருகே பரபரப்பு- வீடியோ
இறந்துபோன ஆட்டோ ஓட்டுநரின் உடலில் அசைவு தெரிந்ததால் அவர் உயிருடன் இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்து, இல்லை என உறுதியான பின்னர் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை உண்டாக்கியது.
தேனி: இறந்த ஒருவரின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டதால் உறவினர்கள் குழப்பமடைந்து இறுதிச்சடங்கை ஒத்திவைத்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனியை அடுத்த அய்யம்பட்டியச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அறிவுச் செல்வம். இவர் நேற்று காலையில் எப்போதும் போல் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது திடேரென சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.உடனே அக்கம்பக்கத்தினர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அறிவுச்செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். அதையடுத்து அறிவுச்செல்வம் உடலை எடுத்து வந்து உறவினர்கள் அஞ்சலிக்காக குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்துள்ளனர்.
அப்போது அறிவுச்செல்வம் உடலில் சிறு அசைவுகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து மருத்துவரை அழைத்து பரிசோதித்துள்ளனர். அவர் அறிவுச்செல்வம் உடலை மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்தால் பிழைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளனர்.
இதையடுத்து அறிவுச்செல்வம் உடலை மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்த போது மருத்துவர் அவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். அதனையடுத்து மீண்டும் இறுதிச் சடங்குகள் நடைபெற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் குழப்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.