தமிழகத்தின் 'டாப்' கோடீஸ்வர வேட்பாளர் வசந்தகுமார்... ரூ332.27 கோடி சொத்து; ரூ122.53 கோடி கடன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்தான் மிகப் பெரிய கோடீஸ்வரர்... தமக்கு ரூ332.27 கோடி சொத்து இருப்பதாகவும் ரூ122.53 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் தற்போதைய நிலையில் வேட்பாளர்களில் சுமார் 25% பேர் கோடீஸ்வரர்கள். வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் என்பது தெரிய வரும்.
வசந்தகுமார் டாப்
பெரும்பாலான தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்புகள் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பல கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களில் வசந்த் அண்ட் கோ நிறுவன உரிமையாளர் வசந்த குமார் முதல் இடத்தில் உள்ளார்.
நாங்குநேரி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார். நாங்குநேரி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அவர் தமது சொத்துக்கள் மற்றும் தம் குடும்பத்தினர் சொத்துக்கள் பற்றிய தகவல்களை ஆவணங்களுடன் கொடுத்துள்ளார்.
ரூ332 கோடி சொத்து
அதில் தமக்கு ரூ.332.27 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள வசந்த் அன்கோ கடைகளின் வருவாய் அடிப்படையில் அவர் சொத்து மதிப்பை பட்டியலிட்டுள்ளார்.
ரூ122 கோடி கடன்
மேலும் பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.122.53 கோடி கடன் வாங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில் வசந்தகுமாரே இந்த டாப் கோடீஸ்வர இடத்தைத் தக்க வைக்கக் கூடும்.