ஏற்காடு இடைத்தேர்தல்.. நாம் சொன்னபடியே 'நரசிம்ம ராவ்' அமைதி காக்கிறது காங்கிரஸ்
சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில் நாம் ஏற்கெனவே கூறியிருந்ததைப் போல எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை தெரிவிக்காமலேயே அமைதியை வாக்குப் பதிவுக்கு முதல் நாள்வரையும் கமுக்கமாக நரசிம்மராவ் பாணி அமைதியையே கடைபிடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. திமுகவும் ரொம்ப நல்லதுதான் என்பதை போல அடக்கியும் வாசித்துக் கொண்டிருக்கிறது.
ஏற்காடு சட்டசபை தேர்தல், எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்திருக்கிறது. இதற்கு முதல் சுழி போட்டது திமுகதான்.
ஏற்காடு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கோரி பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே "ஏக மனதாக" கடிதம் எழுதி அனுப்பினார் திமுக தலைவர் கருணாநிதி. இது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸுடன் இணக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டு பாரதிய ஜனதாவுக்கு எப்படி ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பலாம் என்பது காங்கிரஸின் கேள்வியாக இருந்தது. ஆனால் திமுக தரப்போ, லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதற்கான ஆழம் பார்க்கும் முயற்சியாக இதை பார்த்தது.
இந்த நிலையில் அதிமுகவோ, லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாமா என்ற யோசனையில் ஈடுபட காங்கிரஸும் தமது தூது படலத்தைத் தொடங்கியது. திமுகவைப் போல அதிமுகவும் காங்கிரஸ்- பாஜக இரு கட்சிகளுக்குமே கதவை திறந்து வைத்தது.
இதனால் காங்கிரஸ் கட்சியும் புதிய வியூகம் வகுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. திமுக எப்படி, காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறதோ அதுபோல நாமும் ஏன் அதிமுக- திமுக இரண்டுக்குமேயான வாய்ப்புகளை உருவாக்கி வைக்கக் கூடாது என்பது காங்கிரஸ் மேலிடத்தின் கேள்வியாக இருந்தது.
இதை செயல்படுத்தும் வகையில்தான் ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என்று பகிரங்கமாக அறிவிக்காமல் அப்படியே "நரசிம்மராவ்"போல அமைதியாக இருந்துவிடுவோம் என்ற காங்கிரஸின் திட்டம். இப்படி அமைதியாக இருந்துவிடுவதன் மூலம் அதிமுகவுக்கான கதவை மூட வேண்டியது இருக்காது என்பதும் காங்கிரஸின் கணக்கு,
திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியால் இதுவரை பட்ட அவமானங்கள் போதும்.. அந்த கட்சி பகிரங்கமாக திமுகவுக்கு என அறிவித்து, அதன் மூலம் பாஜகவுடனான புதிய உறவுக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்று கருதியிருந்தது. இப்போது காங்கிரஸ் அமைதி காப்பதுகூட தங்களுக்கு நல்லதே என்று கருதுகிறது திமுக.
நாளை வாக்குப் பதிவு நடைபெறப் போகும் நாளில் கூட திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், போட்டியிடாத கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகவே குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸின் நரசிம்மராவ் பாணி அமைதி, திமுகவை கலங்க செய்யவில்லை என்பதையே அது வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஆக ஏற்காடு இடைத்தேர்தலை முன்வைத்து லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களுக்கு அனைத்து கட்சிகளுமே அடித்தளம் அமைத்துவிட்டன!