3-வது அணி: ஸ்டாலினுடன் மமதா பேச்சால் காங். அதிர்ச்சி- கனிமொழியுடன் சோனியா ஆலோசனை
மூன்றாவது அணி குறித்த திமுகவின் நிலையை கனிமொழியிடம் கேட்டார் சோனியா காந்தி.
டெல்லி: பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணி தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியிடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி உள்ளார்.
மூன்றாவது அணி தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
அத்துடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 3-வது அணி குறித்து மமதா ஆலோசனை நடத்தினார். மமதாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியுடன் சோனியா காந்தி நேரில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையின் போது, மூன்றாவது அணி குறித்து திமுகவின் நிலையை கனிமொழியிடம் சோனியா கேட்டிருக்கிறார்.
அப்போது, மூன்றாவது அணிக்கு செல்வது தொடர்பாக மமதாவிடம் எந்த உறுதிமொழியையும் ஸ்டாலின் தரவில்லை. தற்போதைய நிலையில் திமுக- காங்கிரஸ் உறவு வலிமையானதாகவே இருக்கிறது என சோனியாவிடம் கனிமொழி விவரித்திருக்கிறார். இதனால் காங்கிரஸ் மேலிடம் சற்று நிம்மதி அடைந்துள்ளதாம்.