காங்கிரஸில் கார்த்தி, வசந்த்குமாரைத் தவிர யாருமே 1 லட்சத்தை எட்டலை!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கன்னியாகுமரி வசந்தகுமார் மற்றும் சிவகங்கை கார்த்தி சிதம்பரத்தைத் தவிர யாருமே 1 லட்சம் வாக்குகளை எட்டவில்லை.
லோக்சபாத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸின் ஒரு வேட்பாளர் கூட வெற்றிப் படியை அடையவில்லை.
கடந்த தேர்தலில் திமுக அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 15.03 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 2,44,244 வாக்குகளையும், சிவகங்கையில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் 1,03,273 வாக்குகளையும் பெற்று ஒரு லட்சத்தை தொட்டுள்ளனர்.
ஆனால், மீதமுள்ள 36 தொகுதிகளில் ஒன்றிக் கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் 1 லட்சம் வாக்குகளைத் தொடவில்லை.இதில் காங்கிரஸின் நட்சத்திர வேட்பாளர்களான திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர் ஆகியோரும் அடங்குவர்.