ஜிஎஸ்டியை அறிமுகம் செய்த காங்., திமுக இப்போது எதிர்ப்பது வேடிக்கை: தம்பிதுரை
சென்னை: காங்கிரசும், திமுகவும்தான் ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகம் செய்தது என்று, அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசினார். தம்பிதுரை கூறியதாவது: ஜிஎஸ்டி மசோதாவை திமுகவும் காங்கிரசும்தான் கொண்டுவந்தனர். இப்போது அவர்களே குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது.
உரிமைகள் பறிபோக காரணமாக இருந்தவர்கள் திமுகவும் காங்கிரசும். அதேநேரம், ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்று சில மாற்றங்களை மத்திய அரசு செய்ததாலேயே ஜிஎஸ்டியை ஆதரிக்கிறோம் என்றார்.
மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடுகிறோம். நாங்கள் செல்லும் பாதை சரியான பாதை, விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தை மீட்டெடுப்போம் என்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று இரவு நடைபெற உள்ள ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியில் காங்கிரஸ், திமுக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.