நிதி வசூல்... ஆளும் அதிமுகவை விட அதிக நிதியை வசூலித்து திமுக "சாதனை"!
டெல்லி: 2013-14ம் ஆண்டில் எவ்வளவு நன்கொடைகளைப் பெற்றோம் என்பது குறித்த கணக்கு ஒன்றை இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல் செய்துள்ளன.
இதில் அதிக அளவாக காங்கிரஸ்தான் ரூ. 66 கோடியை திரட்டியுள்ளது. அதேசமயம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ. 14 கோடியை நன்கொடைகள் மூலமாக பெற்றுள்ளதாம்.
அரசியல் கட்சிகள் தாங்கள் வசூலிக்கும் நன்கொடைகள் குறித்து வருடா வருடம் தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்ட வேண்டும். அந்த வகையில் தற்போது முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளன.
நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த கணக்குகளைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கட்சிகள் இதைச் சமர்ப்பித்துள்ளன. இந்தத் தொகைக்கு அவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
பாஜக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம், லோக் ஜன் சக்தி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இதுவரை இந்தத் தகவலை சமர்ப்பிக்கவில்லை.
அதேசமயம், காங்கிரஸ் காட்சியுள்ள கணக்குப்படி அக்கட்சிக்கு ரூ. 66 கோடி நிதி கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களும் கட்சிக்கு நிதியுதவி அளித்துள்ளனராம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு ரூ. 1.03 கோடி கிடைத்துள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சியான திமுகவுக்கு ரூ. 1.05 கோடி கிடைத்துள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை அக்கட்சிக்கு ரூ. 79.85 கோடி வரை கிடைத்துள்ளதாக கணக்கில் கூறப்பட்டுள்ள போதிலும், ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் நிதி கொடுத்தவர்கள் மூலம் ரூ. 1.05 கோடியே கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.
திரினமூல் காங்கிரஸுக்கு ரூ. 1.4 கோடி கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி, சிபிஎம், சிபிஐ, சிவசேனா, தெலுங்கு தேசம் ஆகியவை கணக்கு சமர்ப்பித்துள்ளன என்ற போதிலும் அவற்றுக்கு எவ்வளவு கிடைத்தது என்ற விவரம் தெரியவில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி தனக்கு நிதியே கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது. நிதி வசூலை ஆகாத ஒரே பெரிய கட்சி பகுஜன் சமாஜ் கட்சிதான்.