இலங்கையில் இருந்து 12 கிலோ தங்கம் கடத்தல்: ராமநாதபுரம் காங். தலைவர் குட்லக் ராஜேந்திரன் கைது
இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட காங். தலைவர் குட்லக் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: இலங்கையில் இருந்து 12 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட காங். தலைவர் குட்லக் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் தொண்டியில் இருந்து புதுக்கோட்டை வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை கீரனூர் அருகே நல்லூர் டோல்கேட்டில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
ஓட்டுநர் கைது
இந்த சோதனையின் போது ஒரு காரில் 12 கிலோ எடையுள்ள 119 தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரின் ஓட்டுநர் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
குட்லக் ராஜேந்திரன்
காந்தியிடம் நடத்திய விசாரணையில் காரும் தங்கக் கட்டிகளும் சென்னையில் இருக்கும் குட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமானது என தெரியவந்தது. குட்லக் ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
தப்பி ஓட்டம்
இதையடுத்து சென்னையில் குட்லக் ராஜேந்திரனை சுற்றி வளைத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அதிகாரிகளின் பிடியில் இருந்து குட்லக் ராஜேந்திரன் தப்பியோட முயற்சித்தார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரனின் கை எலும்பு முறிந்தது.
புழல் சிறை
பின்னர் ராயப்பேட்டை மருத்துவமனையில் குட்லக் ராஜேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் குட்லக் ராஜேந்திரனை கைது செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.