நானே ராணி என்றவர் நாலு சுவற்றுக்குள் இருக்கிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: தேர்தல்களத்தில் எதிரிகளையே காணோம்... நான்தான் ராணி என்று கூறியவர்கள் இன்றைக்கு நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று ஜெயலலிதாவின் சிறைவாழ்க்கையைப் பற்றி கிண்டலடிக்கும் விதமாகப் பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் வெண்கல சிலை, சத்தியமூர்த்தி மார்பளவு சிலை, ராஜீவ்காந்தி அரங்கத்தின் பெயர் பலகை திறப்பு ஆகிய மூப்பெரும் விழாக்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.
காமராஜர் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பெரியார், காமராஜர் தமிழக மக்களின் விடிவெள்ளி. காமராஜரின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
ராசிக்காக கூப்பிட்டோம்
விழாவின் பேசிய மாநில தலைவர் ஞானதேசிகன், கர்நாடகத்தின் மல்லிகார்ஜூன கார்கே, கேரள உம்மண்சாண்டி, புதுவை நாராயணசாமியை ஏன் இந்த விழாவுக்கு அழைத்தோம் என்றால் உங்கள் மாநிலத்தில் நீங்கள் ஆட்சியை இழந்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறீர்கள். அந்த ராசி இனிமேலாவது எங்களுக்கு வரட்டும் என்றுதான் அழைத்தோம்'' என்றார் ஞானதேசிகன்.
காமராஜர் பொற்கால ஆட்சி
விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காமராஜர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள். காமராஜரின் உறுதியான பொற்கால ஆட்சியை படைப்போம் என்றார் வாசன்.
தமிழகத்தில் மாற்றம்
தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த உறுதியேற்போம். நாம் வெல்லப்போவது உறுதி. காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியது அத்தியாவசியத் தேவை என்றார் வாசன்.
நாலு சுவற்றுக்குள் ராணி
முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "உல்லாசமாக இருந்தவர்கள் இப்போது கஷ்டப்படுகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லை; நானே மகாராணி என்று சொன்னவர் இப்போது நாலு சுவருக்குள் இருக்கிறார் என்றார்.
அன்னையைப் பழித்தால்
நான் அவரோடு படித்தவன்தான். அவர் சிறைக்கு போனதால் எனக்கு வருத்தமோ சந்தோஷமோ கிடையாது. அவர் அன்னை சோனியாவை பழித்ததால் இதயெல்லாம் வாங்கிக் கட்டித்தான் ஆக வேண்டும்'' என்று போட்டுத்தாக்கினார் இளங்கோவன்.
திருநாவுக்கரசர்
அதேபோல ராணி மாதிரி வாழ்ந்த ஜெயலலிதா சிறையில் இருப்பது கஷ்டம்தான் என்றார் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர். அவரோடு நெருங்கி பழகியவன் என்பதால் சொல்கிறேன். அவர் சிறைக்கு போனதால் எனக்கு சந்தோஷமும் இல்லை; வருத்தமும் இல்லை என்றும் கூறினார்.
மக்களை அழவைக்கவேண்டாம்
ஆனால், புதிய முதல்வரும் அமைச்சர்களும் அழுதுகொண்டே பதவி ஏற்றுள்ளனர். அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள்தான் தமிழக அமைச்சர்கள். பொதுமக்களை அழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார் திருநாவுக்கரசர்.
அடகுவைத்த காங்கிரசார்
காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுபட்டால் மட்டும்போதாது; கட்சியை கட்டுமானம் செய்யவேண்டும். டெல்லியில் ஆட்சி வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் காங்கிரசை அடகு வைத்து விட்டனர். கட்சி வளர்ச்சியை பார்க்காமல் திராவிட கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி வைத்ததால்தான் காங்கிரஸ் தேய்ந்து போனது. இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்'' என்றார் முன்னாள் தலைவர் தங்கபாலு.
வராத கோஷ்டிகள்
என்னதான் காமராஜர் ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பேசினாலும் ப.சிதம்பரம் கோஷ்டியினரும், ஜெயந்தி நடராஜன் கோஷ்டியினரும் காமராஜர் சிலை திறப்பு விழாவிற்கு வராமல் புறக்கணித்தனர்.