திட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி?.. புதிய சர்ச்சை!
Recommended Video
சென்னை: சினிமா விமர்சகர் பிரஷாந்த் ரங்கசாமி போட்ட ஒரு டிவீட்டில் திட்டி கமெண்ட் போட்டு பின்னர் நீக்கியதாக கரூர் எம்பி ஜோதிமணி மீது சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் அதை ஜோதிமணி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், எழுத்தாளருமான ஜோதிமணி தைரியம் மிக்கவர் என்ற பிம்பம் அவரது கட்யினர் மத்தியில் உள்ளது. காங்கிரஸை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதிலடி அளிப்பது அவரது வழக்கமாகும்.
இந்நிலையில் சிதம்பரம் கைது குறித்து மறைமுகமாக காங்கிரஸை விமர்சிக்கும் வகையில் திரைப்பட விமர்சகர் பிரஷாந்த் ரெங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஈழத்தமிழர் கதறிய போது அதிகாரப் போதையில் அகங்காரமாக சுற்றிய அத்தனை பேரையும் தெய்வம் நின்று கொல்லும் எனப் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த டிவீட்டுக்கு ஜோதிமணியின் முகப்பு படத்துடன் கூடிய ட்விட்டர் முகவரியிலிருந்து ''போடா முட்டாள்" என்ற காட்டமான வாசகம் பதிலடியாக தரப்பட்டுள்ளது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உடனடியாக மறுத்த ஜோதிமணி எம்.பி., இது தான் சொல்லவில்லை என்றும், சங்பரிவாரங்களின் பெய்டு டிரோல்ஸ் எனவும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த சினிமா விமர்சகர் பிரஷாந்த் ரெங்கசாமி, யாரும் எதுவும் செய்யவில்லை அக்கா, நீங்கள் பதிவிட்டு விட்டு மற்றவர்கள் மீது பழிபோட வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
இதற்கும் பதில் அளித்துள்ள ஜோதிமணி, மற்றவர்கள் கருத்துக்கு கமெண்ட் அடிக்கும் பழக்கம் தனக்கில்லை என்றும், அதற்கான நேரமும் இல்லை எனவும் கூறியுள்ளதோடு தரம் தாழ்ந்த செயலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தம்பி என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்குதான் சர்ச்சையே உருவாகிறது, சொந்தக்கட்சியை ஒருவர் விமர்சிக்கிறார், அதற்கு பதிலடி தரவேண்டிய இடத்தில் உள்ள ஜோதிமணி எம்.பி. நான் இல்லை..நான் இல்லை.. என ஏன் ஜகா வாங்குகிறார் என காங்கிரஸார் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இந்த டிவீட் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.