சட்டசபையில் இருந்து விஜயதாரணி வெளியேற்றம்
சட்டசபையில் இருந்து குமரி மாவட்ட எம் எல் ஏ விஜயதாரணி வெளியேற்றப்பட்டார்.
Recommended Video
சென்னை : சட்டசபையில் சபாநாயகர் அனுமதி மறுத்த பிறகும் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், குமரி மாவட்ட எம் எல் ஏ விஜயதாரணியை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அப்போது, குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதாரணி குமரி மாவட்ட பிரச்னைகளை எழுப்ப முயன்றார்.
அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், தொடர்ந்து விஜயதாரணி கேள்வி எழுப்பினார். இதனால், சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி விஜயதாரணியை சபையில் இருந்து சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார்.
சபாநாயகரின் உத்தரவை அடுத்து அவைக் காவலர்கள் அவரை வெளியேற்றினர். அப்போது அவர் பேசுகையில், ஒரு பெண் உறுப்பினர் என்றும் பாராமல் சபாநாயகர் என்னை வெளியேற்ற உத்தரவிட்டது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவைக் காவலர்கள் தன்னிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாகவும் விஜயதாரணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.