டிடிவி தினகரனுடன் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி திடீர் சந்திப்பு.. ஏன்??
டிடிவி தினகரனை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி திடீரெனி சந்தித்துப் பேசியது பரபரப்பைக் கூட்டியது.
சென்னை: அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஏற்கெனவே இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் அவர் பக்கம் உள்ளனர். தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வருகை தருவது, அதை எப்படி தடுக்கலாம் என எடப்பாடி அணி ஆலோசனை நடத்தியது என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டில் அவரை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எம்எல்ஏ விஜயதாரணி கூறுகையில் தினகரனை சந்தித்து பேசியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அவரது மாமியார் சந்தானலட்சுமி அம்மையாரின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றேன்.
எனது கணவர் இறப்புக்கும் சந்தான லட்சுமி அம்மையாரின் வீட்டில் இருந்து துக்கம் விசாரிக்க வந்தனர். கட்சியை வளர்க்க டிடிவி தினகரனின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
பாஜக செயலை கண்டிக்காவிடில் அதிமுக நிலைக்காது. ஆளும் கட்சியின் சுதந்திரத்தை பாஜக பறித்துள்ளது என்றார் அவர்.