ஜெ.படம் திறப்பு: சபாநாயகர், முதல்வரை நேரில் சந்தித்து காங். எம்எல்ஏ விஜயதாரணி வாழ்த்து!
சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்ததற்காக சபாநாயகர் தனபாலை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வாழ்த்து தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தமைக்காக சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வாழ்த்து தெரிவித்தார்.
மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் தமிழக அரசு திறந்துவைத்தது. எனினும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்பதால் அவரது படத்தை திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் இந்த படத்திறப்பு விழாவை புறக்கணிப்பது என்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்தன. என்னதான் இவர்கள் படம் திறப்பது தவறு என்றாலும் காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதாரணி மட்டும் வீரமிக்க பெண்மணிக்கு மரியாதை செய்வதில் தவறில்லை என்று கூறியிருந்தார். விழாவுக்கு அழைத்தால் நிச்சயம் செல்வதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விழாவை புறக்கணிப்பது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் போட்ட உத்தரவால் அவர் செல்லவில்லை. இதையடுத்து விழா முடிந்தவுடன் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து விஜயதாரணி வாழ்த்து தெரிவித்தார்.