காமராஜர் நினைவிட பராமரிப்பில் அலட்சியம், ஜெ. நினைவிடத்திற்கு ரூ. 50 கோடி... கொந்தளிப்பில் காங்
காமராஜர் நினைவிடம் புதர் மண்டிக் கிடப்பதை சரிசெய்ய அக்கறை காட்டாத அரசு ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க ரூ. 50 கோடி நிதிஒதுக்கியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் புதர் மண்டிக் கிடப்பதை சரிசெய்ய அக்கறை காட்டாத அரசு ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க ரூ. 50 கோடி நிதிஒதுக்கியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் புகழை தமிழகத்தில் ஒலிக்கச் செய்தவர் என்றால் அது காமராஜர் தான். எளிமையின் வடிவமாகவும், முதல்வர் மற்றும் ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் திகழ்ந்த கிங் மேக்கர் காமராஜர்.
மக்கள் நலனுக்காகவே வாழ்நாள் முழுவதும் செலவிட்டு மறைந்தவரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி ஓய்ந்து போய்விட்டனர் காங்கிரஸ் கட்சியினர். காமராஜரின் நினைவைப் போற்றும் வகையில் அரசு சென்னை கிண்டியில் 1976ம் ஆண்டு ரூ. 9.45 இலட்சம் மதிப்பீட்டில் காமராஜர் நினைவிடம் அமைத்தது.
காமராஜர் நினைவிடத்தில் பராமரிப்பில்லை
அரசின் பராமரிப்பில் இருக்கும் இந்த நினைவிடமானது சரியான பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடப்பதாக காங்கிரஸ் கட்சியினர் அரசிடம் புகார் தெரிவித்தனர். எனினும் இன்று வரை அந்த கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவேயில்லை என்று அதிருப்தியில் உள்ளனர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.
ஜீரணிக்க முடியாத காங்கிரஸ்
இந்நிலையில் 2018-19ம் நிதிநிலை அறிக்கையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு மெரினாவில் ரூ. 50 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை. காமராஜருக்கு ஒரு நீதி, ஜெயலலிதாவிற்கு ஒரு நீதியா என்று கொந்தளிப்பில் உள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்
காமராஜர் நினைவிடத்தை அரசால் பராமரிக்க முடியாவிட்டால், எங்களிடமே ஒப்படைத்து விடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர் கே.ஆர். ராமசாமி தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
முடியாவிட்டால் விட்டுவிடுங்கள்
காமராஜர் நினைவிடத்தை அரசால் பராமரிக்க முடியாவிட்டால், காங்கிரஸ் கட்சி ஏற்று பராமரிக்கத் தயாராக இருக்கிறது என்று அரசிடம் கோரிக்கை வைக்கவும் கதர்சட்டையினர் திட்டமிட்டுள்ளனர். தூய்மை, நேர்மையான அரசியல்வாதியான காமராஜரின் நினைவிடத்தைக் கூட பராமரிக்க முடியாத அரசின் செயல் காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தியடையவைத்துள்ளது. அரசு ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.