பழனிச்சாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கிறது!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களது ஆதரவைப் பெற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரமாக முயன்று பார்த்தது. சசிகலா இருந்தபோது அந்த முயற்சிகள் தீவிரமாக இருந்தன. ஆனால் திருநாவுக்கரசர் தவிர தமிழக காங்கிரஸ் தலைவர்களும், கட்சி மேலிடமும் இதை ஏற்கவில்லை. தி்முகவின் நிலைப்பாட்டை ஒட்டியே நமது நிலைப்பாடும் இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறி விட்டது.
ப.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களும் அதிமுகவுக்கு ஆதரவு தருவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. ஆனால் அதில் எந்த முடிவையும் எடுக்காமல் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று கூறி விட்டார் திருநாவுக்கரசர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அனைவரும் எதிர்த்து ஓட்டுப் போடுங்கள் என்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் தலைமையில் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை திருநாவுக்கரசர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்சி மேலிட உத்தரவுப்படி எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வரும் நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் திருநாவுக்கரசர்.