காவிரி.. தமிழகத்தில் இன்றும், நாளையும் ரயில் மறியல்.. பல்வேறு கட்சிகளின் ஆதரவு குவிகிறது! #cauvery
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக பாஜக அரசைக் கண்டித்து இன்றும், நாளையும் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்த இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து இரு தினங்கள் நடைபெறும் ரயில் மறியலில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், விவசாய பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் செயல் வீரர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
வஞ்சகம்
காவிரி நடுவர் மன்றத்தில் நமக்கு வழங்கப்பட்ட நீதியை முடக்குகிற வகையில் அரசியல் ஆதாய நோக்கத்தோடு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மத்திய நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் வஞ்சகத்தன்மைக்கு தமிழக மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் அமைய வேண்டும் என விரும்புகிறேன்.
துரோக அரசியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று திடீரென கூறி செயல்படும் மத்திய பாஜக அரசின் துரோக அரசியலுக்கு முடிவு கட்டுகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கையில் மூவர்ணக் கொடியை ஏந்தி பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ்
இந்தப் போராட்டத்தில் 18ம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாசன் தலைமையில் நடைபெறும் மறியலில், விவசாய சங்கத்தினர் மற்றும் தமாகாவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி
இந்தப் போராட்டத்தில் மதிமுக மட்டுமல்லாமல் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் கலந்து கொள்கின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரும் இந்த மறியலில் 18ம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் பங்கேற்கிறார்.
நாம் தமிழர் கட்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி கலந்து கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாளை நடத்தப்படும் ரயில் மறியல் போராட்டத்திற்கு முன்னதாக திமுக ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போலீசார் உஷார் நிலை
தொடர்ந்து 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ள நிலையில், பயணிகளுக்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாத வண்ணம், ரயில்வே போலீசாரும் மாநில சட்டம் ஒழுங்கு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட ரயில் நிலையத்துக்கு வரும் அரசியல் கட்சியினரை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.