ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர மாட்டார்... கராத்தே தியாகராஜன் பரபர!
சிரஞ்சீவி போல நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வரமாட்டார் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை : சிரஞ்சீவி போல நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வரமாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். முன் ஏற்பாடுகளுடன் தான் ரஜினி அரசியலுக்கு வருவார், அரசியலுக்கு வந்தால் ரஜினி முதலில் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி முறைபடுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறியுள்ள நிலையில் இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜனும் ரஜினியின் சஸ்பென்ஸ் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மே மாதம் ரஜினி ரசிகர்களை சந்தித்த போது அவரை போயஸ் கார்டன் இல்லத்தில் போய் சந்தித்து விட்டு வந்தார் கராத்தே தியாகராஜன். அப்போதே நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது, கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறி இருந்தார்.
தேர்தலுக்கு முன்பே
இந்நிலையில் ரஜினியின் இன்றைய பேச்சுக்குப் பிறகு அது குறித்து கருத்து தெரிவித்துள்ள கராத்தே தியாகராஜன் கூறியுள்ளதாவது : ரஜினிகாந்த் நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வருவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அரசியலுக்கு வருவார் என்றே தெரிகிறது.
பதவிகளை சீரமைப்பார்
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ரசிகர் மன்றத்தை ஒழுங்குபடுத்தி பதவிகளை சீரமைப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவர் நிச்சயமாக தனிக்கட்சி தொடங்குவது உறுதி.
அனைவரிடமும் செல்வாக்கு
ஏற்கனவே அரசியலில் தன் வழி தனி வழி என்று சொல்லி வருகிறார். தனிக்கட்சி தொடங்கி அதன் பின்னர் தான் கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் பற்றி முடிவு செய்வார். சிறுபான்மை மக்களிடமும் ரஜினி மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஆர்கே நகர் தேர்தலில் பாஜகவை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது இதையெல்லாம் மனதில் வைத்து தான் ரஜினி அரசியல் முடிவை எடுப்பார்.
3 மாதங்களுக்குப் பிறகே
சிரஞ்சீவி போல நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வரமாட்டார். முன்னேற்பாடுகளுடன் தான் அவர் அரசியலுக்கு வருவார். நிச்சயம் அவர் அரசியலுக்கு வர 3 மாதங்கள் ஆகும் என்பது தான் என்னுடைய கணிப்பு என்று தியாகராஜன் கூறியுள்ளார்.