கட்டையில் கட்டிய கழுதையின் நிலையில் காங்கிரஸ்!
சென்னை: முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நீதி கதைகள் சொல்லும்போது கழுதை கதை ஒன்று சொல்வார்கள்.தற்போது எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கதியும் அப்படிதான் என்கிறார்கள் சில அரசியல் வல்லுனர்கள்.
நேரு வளர்த்த கட்சி கைமாறி,கைமாறி தற்போது சோனியா காந்தியின் கையில் இருக்கிறது.
ஆனால்,அம்மாவும்,மகனும் இணைந்து அதனை ஆற்றில் விட்டுவிடுவார்களோ என்று தோன்றுகிறது.
இதுதான் அந்தக் கழுதைக் கதை...
தந்தையும்,மகனும் சேர்ந்து கழுதை ஒன்றை வளர்ப்பார்கள்.ஒரு முறை பிரயாணத்தின் போது அப்பா கழுதை மேல் ஏறிக்கொள்வார்.கொஞ்ச நேரத்தில் மகனும் ஏறிக்கொள்வான்.ஆனால்,கழுதையின் நிலை பற்றி இருவருமே கவலைப் பட மாட்டார்கள்.
கட்டையில் கட்டி தூக்கிப் போ:
கொஞ்ச நேரத்தில் கழுதையின் நிலையை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் அப்பா,மகனிடம் அதனை பற்றி சொல்வார். உடனே இந்த அறிவு ஜீவி அப்பாவும்,மகனும் கழுதையை ஒரு கட்டையில் கட்டி சுமந்து செல்வார்கள். வழியில் ஒரு பாலத்தில் கொட்டிகிடக்கும் எண்ணையில் வழுக்கி கடைசியில் கழுதையை ஆற்றில் விட்டு விடுவார்களாம்.
கயிற்றில் தொங்கும் காங்கிரஸ்:
அப்படிதான் தற்போது காங்கிரஸின் நிலையும் இருக்கிறது.ஒரு குடும்பத்தையே சுமந்த காங்கிரஸ் தற்போது பாரம் தாங்காத கழுதையின் நிலையில்தான் இருக்கிறது.
மோடி அலையில் அடித்துபோன ராகுல்:
ஏற்கனவே சட்ட மன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் திமுகவின் காங்கிரஸ் மோகம் வெகுவாக குறைந்து விட்டது.இந்நிலையில் அதிகமாக வீசும் மோடி அலையால் ராகுலின் பிரச்சாரம் எடுபடாமலே போய்க் கொண்டு இருக்கின்றது.
வாயை தொறந்து பேசிருக்கலாமோ? :
என்னதான் விளம்பரம் போட்டாவது நல்லா காட்டலாம் கட்சி நிலைமையை என்று நினைத்தாலும் மக்கள் மனதில் எப்போதும் வாய் மூடியே இருந்த மன்மோகன் சிங்தான் நினைவுக்கு வருகிறார்.
சரிவு தவிர வேறொன்றும் இல்லை:
ஆட்சியில் ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறார்களா என்று பார்த்தாலும் எந்த நல்ல திட்டங்களும் கண்ணில் பட மாட்டேன் என்கின்றது. பொருளாதார சரிவு மட்டும்தான் கண்ணில் படுகின்றது.
காங்கிரஸ் மாறி இருக்காதீக:
ஒரு காலத்தில் கட்சி என்றால் காங்கிரஸ்தான் என்ற நிலை மாறிப்போய் எந்த கட்சியும் காங்கிரஸ் போல் இருக்க கூடாது என்னும் அளவிற்கு பல பிளவுகளாக இருக்கின்றது காங்கிரஸ்.
சொந்தமா ஆப்பு வச்சுக்கிறது இதுதான்:
இந்நிலையில் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் விடுதலைக்கு ஆப்பு வைத்து ஒட்டு மொத்த தமிழ் ஆர்வலர்களின் சாபங்களை வாங்கி கட்டி கொண்டிருக்கிறது காங்கிரஸ். புல்லருக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்ற காங்கிரஸின் புதிய நியாயம், அநியாயம் என்ற குரல்கள் வலுத்து ஒலிக்கின்றன.
எதிரிகளை வளர்த்து விட்டாரா சோனியா? :
டெல்லியில் வேறு சட்டபேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது காங்கிரஸ். தற்போது,வரும் நாடாளுமன்ற வெற்றியே தமிழ்நாட்டின் கையில் இருக்கும் நிலையில் இப்படி தமிழர்களையே காங்கிரஸ் எதிரிகளாக மாற்றிக் கொண்டுள்ளது.
இதில் உட்கட்சி பூசல்கள் வேறு:
இப்படி துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சியை சோனியாவும்,ராகுலும் என்னதான் கட்டையில் கட்டி சுமந்தாலும் உட்கட்சி பூசல்களால் காங்கிரஸ் தேர்தல் ஆற்றில் அடித்து கொண்டு போனாலும் போய்விடும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.