நக்மாவின் தமிழக பொறுப்பாளர் பதவி பறிப்பு! குஷ்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!!
தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை நக்மாவிடம் இருந்து வெற்றிகரமாக பறித்துவிட்டார் குஷ்பு.
Recommended Video
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மா நீக்கப்பட்டிருக்கிறார். இதற்காண நடவடிக்கையை எடுத்துள்ளார் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா.
அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயளாலரான நடிகை நக்மா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸின் துணைத்தலைவர் ஆலிஸ்மனோகரி நக்மாவின் ஆதரவாளராக மாறினார்.
இதனால், மகளிர் காங்கிரஸின் தலைவர் ஜான்சிராணிக்கும் நக்மாவுக்குமிடையே அடிக்கடி முட்டல் மோதல் வெடித்தது. இதனால் தமிழக மகளிர் காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாக உடைந்து நின்றது.
நக்மா-குஷ்பு மோதல்
இந்த நிலையில், நடிகை நக்மாவின் ஆதிக்கம் தேவையின்றி அதிகரித்ததால் நடிகை குஷ்புவுக்கும் மகளிர் காங்கிரஸில் ஒரு கோஷ்டி உருவானது. இதனால், நடிகைகள் நக்மாவும் குஷ்புவும் மேலிட செல்வாக்கை வைத்துக்கொண்டு, தமிழக மகளிர் காங்கிரஸை உண்டு இல்லை என்கிற ரீதியில் ஒரு கை பார்த்து வந்தனர். இரு தரப்பும் முஷ்டிகளை உயர்த்தி நின்றது. அதே சமயம், ஜான்சிராணி தரப்பும் முஷ்டியை முறுக்கினாலும் நடிகைகள் மோதிக்கொள்வதை வேடிக்கைப்பார்த்தது.
மகளிர் காங். தலைவர் பதவி பறிப்பு
மகளிர் காங்கிரசில் கோஷ்டிகளை உருவாக்கி அதனை செயல்பட விடாமல் முடக்கி வைத்திருக்கிறார் என ஆரம்பித்து நக்மாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுலின் கவனத்துக்கு கொண்டு போனார் குஷ்பு. நக்மாவை எதிர்த்து ஜான்சிராணியும் புகார் வாசித்தார். இது, குஷ்புவின் புகாருக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்த மேலிடம், அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தலைவர் ஷோபா ஓஷாவின் ஆதரவில் தான் நடிகை நக்மா, இந்தளவுக்கு ஆடுகிறார் என அறிந்து, ஷோபாவிடமிருந்து தலைவர் பதவியை சமீபத்தில் பறித்தது.
நக்மா பதவி பறிப்பு
ஷோபாவுக்கு பதிலாக எம்.பி. சுஷ்மிதாவை தலைவர் பதவியில் அமர வைத்தார் ராகுல்காந்தி. சுஷ்மிதாவுக்கும் குஷ்புவுக்கும் ஏற்கனவே நல்ல அறிமுகம் உண்டு. இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகம் மற்றும் புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மாவை அதிரடியாக நீக்கியிருக்கிறார் சுஷ்மிதா. இந்த நடவடிக்கையால் குஷ்புவும், ஜான்சிராணியும் குதுகலமாகியிருக்கிறார்கள்.
நக்மாவின் கனவை தகர்த்த குஷ்பு
தமிழக மகளிர் காங்கிரசில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி, வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட தீர்மானித்திருந்தார் நக்மா. அதை தற்போது முறியடித்திருக்கிறார் குஷ்பு.