எப்போதோ அரசியலுக்கு வரவேண்டியவர் இப்போது பூச்சாண்டி காட்டுகிறார்...ரஜினி மீது ஈவிகேஎஸ் தாக்கு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க பாஜக அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். 30 வருடத்திற்கு முன்பு அரசியலுக்கு வரவேண்டியவர் இப்போது பூச்சாண்டி காட்டுகிறார் என்று ரஜினியை இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் அட்சியும், தமிழகத்தில் செயல்படாத பக்கவாத ஆட்சியும் நடக்கிறது. அதிமுகவினர் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியவரை அவர் இறந்த ஓராண்டக்குள்ளாகவே மறந்துவிட்டனர். அதிமுகவினருக்கு தற்போது ஜெயலலிதாவின் முகம் கூட நினைவில் இல்லை. அதனால் தான் ஜெயலலிதாவின் சிலை முறையாக அமைக்கப்படாமல் சர்ச்சைக்குள்ளாகிவிட்டது.
கார்த்தி சிதம்பரம் திட்டமிட்டு கைது
அமித்ஷா மகன் அடித்த கொள்ளையை கண்டு கொள்ளவில்லை. ஆனால் பா.ஜனதா அரசின் முறைகேடுகளை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புள்ளி விவரத்துடன் விமர்சனம் செய்வதால் திட்டமிட்டு அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளார்கள்.
ஸ்டாலின் முதல்வர் ஆவார்
வடக்கில் நடக்கும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெற்று வரும் வெற்றி மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை தூக்கி எறிய தயாராகி விட்டார்கள் என்பதை காட்டுகிறது. மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆவதும் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவதும் உறுதி.
ரஜினி பூச்சாண்டி காட்டுகிறார்
ஆன்மீக அரசியல் என்று ரஜினி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார். 30 வருடத்துக்கு முன்பு செய்ய வேண்டியதை இப்போது செய்கிறார். இவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்? தமிழக மக்கள் மீது கொண்ட அக்கறை காரணமா? இல்லை தமிழகத்தை முன்னேற்ற வேண்டிய லட்சியமா? எதுவும் கிடையாது. கையில் இருக்கிற படங்கள் நன்றாக ஓட வேண்டும். மனைவி செய்த தவறுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வளவுதான்.
பாஜக அழுத்தம் கொடுக்கிறது
பாஜக கொடுக்கும் அழுத்தத்தால் தான் ரஜினி அவர்கள் ஆட்டிவைக்கும்படியெல்லாம் பேசுகிறார். அவர் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது ரஜினி நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்கவே மாட்டார் என்றும் இளங்கோவன் ஆணித்தரமாக கூறினார்.