தலித்தான் வேட்பாளர் என்றால் ராம்விலாஸ் பஸ்வானை ஏன் பாஜக நிறுத்தவில்லை.. திருமாவளவன் சுளீர்
ஜனாதிபதி வேட்பாளராக தலித் ஒருவரை நிறுத்த வேண்டும் என்றால் பாஜக ஏன் ராம்விலாஸ் பஸ்வானை நிறுத்தவில்லை என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பாஜக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலித் வேட்பாளரை நிறுத்துவதாகக் கூறி பாஜக நாடகம் ஆடுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலியாகிவிடக் கூடாது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தலித் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
பாஜகவின் சதி
அப்போதுதான் பாஜகவின் சதியை முறியடிக்க முடியும். தலித் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றால் ராம்விலாஸ் பஸ்வானை வேட்பாளராக பாஜக ஏன் அறிவிக்கவில்லை.
தலித் விரோதி
தலித் வேட்பாளரை பாஜக நிறுத்தி, எதிர்க்கட்சிகள் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால் இலகுவாக இந்துத்துவ அமைப்புகள் தலித் விரோதிகள் என்று குற்றம் சொல்ல வாய்ப்பு ஏற்படும். எங்களுக்குத்தான் தலித்துகள் மீது கரிசனம் இருக்கிறது என்று பாஜக தன்வயப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
தலித் வாக்காளர்கள்
தலித் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவில் உண்டு. காங்கிரஸ் கட்சியின் உயிர் நாடி பழங்குடி மற்றும் தலித் மக்களிடமே உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி தலித் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
ஆதரிக்க முடியாது
பாஜக அரசியல் ஆதாயத்திற்காகவே ராம்நாத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவரை கண்டிப்பாக நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கக் கூடாது என்று திருமாவளவன் திட்டவட்டமாக கூறினார்.