பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு: நடிகை குஷ்புவால் காங்.க்கு நெருக்கடி- பாயும் ஒழுங்கு நடவடிக்கை?
பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியடைந்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை; பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேட்டியளித்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு மீது அக்கட்சி மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை குஷ்பு, பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இது குஷ்புவின் தனிப்பட்ட கருத்து என தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்திருந்தார்.
போட்டு கொடுத்த சிதம்பரம் கோஷ்டி
தமிழகத்தைச் சேர்ந்த சிறுபான்மை அமைப்புகளின் தலைவர்கள் பலரும் குஷ்புவுக்கு எதிராக திருநாவுக்கரசருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அத்துடன் ப. சிதம்பரம் தரப்பு ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை டெல்லி மேலிடத்துக்கு கடிதமாக அனுப்பிவிட்டனர்.
காங்கிரஸுக்கு நெருக்கடி
குஷ்பு, தேசிய செய்தித் தொடர்பாளர் என்பதால் இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் ராகுல் காந்தியிடமும் புகார் செய்தனர். அதுவும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநில இஸ்லாமிய அமைப்புகள் ராகுல் காந்தியிடம் இது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் காங்கிரஸ் மேலிடம் நெருக்கடிக்குள்ளானது.
பல்டி அடித்த குஷ்பு
இதையடுத்து டெல்லி மேலிடம் குஷ்புவிடம் இது குறித்து விளக்கம் கேட்டது. இதற்கு பதிலளித்த குஷ்பு, நான் பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கவே இல்லை. பெண்கள் உரிமை என்கிற அடிப்படையில் முத்தலாக் முறைக்கு எதிராக மட்டுமே பேசினேன் என பல்டி அடித்திருக்கிறார். ஆனாலும் குஷ்புவின் பதிலில் மேலிடப் பிரதிநிதிகள் திருப்தி அடையவில்லையாம்.
ஒழுங்கு நடவடிக்கை?
உத்தரப்பிரதேச தேர்தலுக்காக பாஜக, பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருகிறது என குஷ்பு பேசியிருந்தார். இப்போது அதே உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்குகளைத் தக்க வைக்க குஷ்பு மீது ஒழுங்குநடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.