இடஒதுக்கீடு முறையாக பின்பற்றாத உள்ளாட்சித் தேர்தல் ரத்து- காங்கிரஸ் வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதற்கு காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
தமிழகத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில், நேற்று வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தொடக்கத்தில் இருந்தே சரியாக செயல்பட வில்லை. இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில் ஒரு ரகசிய போக்கையே தமிழக அரசு கடைபிடித்து வந்தது. எஸ்டி, எஸ்சி, பெண்களுக்கான இடங்கள் எது எது என்பது முறையாக வரையறுத்து வெளியிடப்பட வில்லை. குறிப்பாக பெண்களுக்கு இந்த தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் பெண்களுக்கான இடங்கள் எது என்பது சரியாக தெரியப்படுத்தவில்லை. மேலும், திருச்சி மாநகராட்சி பொது பிரிவுக்கு என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் பெண்களுக்கான இடம் என்று மாற்றிச் சொல்லப்பட்டது. இப்படி மாற்றி மாற்றி சொல்லி ஒரு குழப்ப நிலையில்தான் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டது.
எஸ்சி, எஸ்சி, பெண்கள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வெற்றிக்காக பயன்படுத்த நினைத்ததே தவிர அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமையாக கருதவில்லை. எனவே, சென்னை ஐகோர்ட் சொல்லி இருப்பது வரவேற்கத் தக்க ஒன்று என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.