ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. ஸ்ரீரங்கம் குறித்து ஈ.வி.கே.எஸ் தகவல்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பாகவும், போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்தும் மேலிடத்துடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை திமுக அறிவித்து விட்டது. விரைவில் அதிமுகவும், பாஜகவும் அறிவிக்கவுள்ளன. மற்ற கட்சிகளின் நிலை தெரியவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார். ஆனால் அவரது கட்சி இப்போதுதான் பிறந்த பச்சைக் குழந்தை என்பதால் கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பது அவரது கட்சியினருக்கே புரியவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு இளங்கோவன் பதிலளிக்கையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கள் கருத்துக்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தெரியப்படுத்துவோம்.
எப்படி அணுகுவது என்பதை பற்றி தலைவர்களிடம் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறோம். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா, யாருடன் கூட்டணி சேருவது, தணித்து நிற்பதா அல்லது யாரை ஆதரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதனை மேலிடத்தில் தெரிவிப்போம். மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ. அதனை ஏற்போம் என்றார்.
பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதை காங்கிரஸ் ஆதரிக்குமா என்ற கேள்விக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை, மதச்சார்பற்ற வேட்பாளரை நிறுத்தினால் அவரை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும் என்று இளங்கோவன் பதிலளித்தார்.