அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்… திருநாவுக்கரசர்
சென்னை: திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று கூறினார்.
இதுகுறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக நாளை கூட்ட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் நேரிலும், தொலைபேசியிலும், கடிதத்தின் மூலமாகவும் அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சார்பில் நானும், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர். ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் பவன் குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளோம். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகதிற்கான பிரச்சனை, தமிழக விவசாயிகளுக்கான பிரச்சனை என்ற அடிப்படையில் கூட்டப்படுகிறது. இதற்கும் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது கூட்டணிக்கான கூட்டமுமல்ல.
ஆளும் கட்சி கூட்டி இருக்க வேண்டிய கூட்டம் இது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆளும் கட்சி கூட்ட வேண்டும் என்றும் சட்டப்பேரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் கேட்டுக் கொண்டும் ஆளும் கட்சி அதனை கண்டு கொள்ளவில்லை. ஆளும் கட்சி செய்யத் தவறிய ஒன்றை பிரதான எதிர்க்கட்சியாக உள்ள திமுக செய்கிறது.
கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்கள் பொதுப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைகின்றன. அது போன்று மக்கள் பிரச்சனைக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.