சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் சென்னை வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 25 எம்.பிக்கள் லோக்சபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் இன்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமூர்த்திபவனில் இருந்து ஊர்வலமாகச் சென்று, அண்ணாசாலை தபால் நிலையம் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் ஆர்பாட்டம்
அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மது விலக்குப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
மோடிக்கு கறுப்புக்கொடி
காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
கைது செய்யப் போறாங்க
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் தொண்டர்களே! அமைதியாக இருங்கள். இப்போ நம்மை எல்லாம் கைது செய்யப் போகிறார்கள். போய் அமைதியாக வேனில் ஏறுங்கள். வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்றார்.
நான் ஜெயிலுக்கு போறேன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொன்ன சிறிது நேரத்திலேயே, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். நான் ஜெயிலுக்கு போறோன்... ஜெயிலுக்கு போறேன் என்று கூறிக்கொண்டே வேனில் ஏறி புறப்பட்டனர். அனைவரையும் புதுப்பேட்டை சமுதாய கூடத்தில் தங்கவைத்துள்ளனர்.