பேஸ்புக் வீடியோவில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை.. மீண்டும் பரபரப்பில் 'மெரினா காவலர்' மாயழகு
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராளிகளின் மத்தியில் மைக் பிடித்து பேசி பிரபலமான போலீஸ் கான்ஸ்டபிள் மாயழகு, தற்போது ஒரு வீடியோவை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பேசி சமூக வலைத்தளங்களில் வைரலானவர் கான்ஸ்டபிள் மாயழகு.
இவரை காவல்துறை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அடுத்த அதிரடியாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வதந்தி
இந்த வீடியோவில், மாயழகு கூறுகையில், தன்னை தொடர்புப்படுத்தி வெளியாகும் வதந்திகளுக்கும் பொய்யான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுவதாகவும், தற்போது நான் என் வீட்டில் இருந்தபடி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வேறு வேலை வேண்டாம்
மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின்போது தான் பேசியது தொடர்பாக தன் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நாளை பணிக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை, தனக்கு போலீஸ் வேலை போய்விட்டால் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக முன்னர் சமூக வலைத்தளங்களில் சிலர் தெரிவித்திருந்ததை குறிப்பிட்டுள்ள அவர், அந்த வேலை இனி எனக்கு தேவை இல்லை என்றும், போலீஸ் வேலைதான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
சக காவலர் வீர மரணம்
அதேநேரம், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அவரது சக காவலர் சங்கர் என்பவரின் மனைவி காளை தாக்கி வீர மரணம் அடைந்துவிட்டதாகவும், அந்த சங்கரின் மனைவிக்கு அந்த வேலையை தந்து உதவினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
முதல்வருக்கு கோரிக்கை
ஒருவேளை, தனியார் நிறுவனங்கள் வேலை அளிக்க தயாராக இருப்பதாக வந்த தகவல்கள் பொய்யானதாக இருக்குமானால், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இறந்த காவலர் சங்கரின் குடும்பத்துக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் நிதியை மட்டும் தராமல், அவரது மனைவிக்கு ஒரு அரசு வேலையை தந்து ஆதரவற்று நிற்கும் அவரது குழந்தைகளின் கஷ்டத்தை போக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் மாயழகு கூறியுள்ளதோடு, இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மிக அதிகமாக ‘ஷேர்' செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.